Sri Sukreeswarar Temple – Tiruppur

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில் – திருப்பூர்

தமிழ்நாட்டில் ஆண்ட மன்னர்கள் தங்களுடைய திறமைகளை எதிகாலத்துக்கு பறைசாற்ற பல கோயில்களை உருவாக்கி அதில் தங்களுடைய வீரம் ,வெற்றிகள் ,குடைகள் ஆகியவற்றை கல்வட்டுகளில் எழுதி வைத்தார்கள் மற்றும் தங்களுடைய கடவுள் பக்தி மற்றும் கலை நயங்களை கோயில்களை கட்டி அதில் அழகிய சிற்பங்களை வடித்து தங்களை வெளிப்படுத்தினார்கள் , அவைகள் நாளடைவில் பல போர்களாலும் , பராமரிப்புகள் இன்றியும் பல அழிந்து உள்ளது. அவ்வாறு மிகவும் பழமையான சுமார் 2000 வருட காலத்தை சார்ந்ததாக கருதப்படுகிற இந்த சுக்ரீஸ்வரர் கோயிலை பற்றித்தான் இந்த பதிவில் நாம் காண போகிறோம் .

ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது .கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு இங்கு உள்ளது .

கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை , கோயிலை சுற்றி அகழி போன்ற அமைப்பு காணப்படுகிறது . உள்ளே நுழைந்தால் அம்மன் சன்னதி வலது புறத்தில் காணப்படுகிறது .  சிவன் சன்னதிக்கு நேரே வாசல் இல்லமால் தெற்கு புறத்தில் வாசல் அமைந்துள்ளது , உள்ளே சென்றால் யோக சனீஸ்வரர், சுக்ரீவர் திரு உருவ  சிலைகள் உள்ளன .  அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. உள்ளே வீற்றியிருக்கும் சுக்ரீஸ்வரர் 31 .5 அடி உயரம் கொண்டதாகும் , 28 ஆகம விதிகளை குறிக்கும் வகையில் 28 அடி லிங்கம் கருவறையில் கிழ் புதைக்கப்பட்டு 3 .5 அடி வரை மட்டும் லிங்கம் வெளியே தெரியும் படி அமைத்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது .

சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார்.

பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு கூறுகிறது .

தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு நந்தி :

இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார். பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

 உடலில் மரு உள்ளவர்கள் மிளகு எடுத்துவந்து இத்தல ஈசனுக்கு வேண்டி அவ் மிளகை வைத்து வழிபாடு செய்தால் உடலில் உள்ள மரு மறையும் என்ற நம்பிக்கை உள்ளது .

Photos:

https://alayamtrails.blogspot.com/2021/07/sri-sukreeswarar-temple-tiruppur.html

திறந்திருக்கும் நேரம் :

காலை 7 .00 – 11 .00 , மாலை 5 .00 -8 .00

செல்லும் வழி :

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோயிலும் உள்ளது .

Location:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *