Pasubetheswarar Temple – Thiruvetkalam(Chidambaram)


பாசுபதேஸ்வரர் கோவில்-திருவேட்களம்(சிதம்பரம்)

Pasubatheeswarar Temple, Thiruvetkalam(chidambaram)
Main Gopuram

இறைவன் பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்

இறைவி – நல்லநாயகி, சற்குனாம்பாள்

தீர்த்தம் – கிருபா தீர்த்தம்

ஊர் – திருவேட்களம் ,சிதம்பரம்

மாவட்டம்கடலூர்

பாடியவர்கள் – திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,முருகனை பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார்

விழாக்கள் – வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது.மற்றும் இதே மாதத்தில் முருகனுக்கு விழா கொண்டாடப்படுகிறது .

  • தேவாரம் பாடப்பட்ட சிவத்தலங்களில் காவேரி வடகரையில் 2 வது தலம். 274 சிவாலயங்களில் 2 வது தேவார தலம் . 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது .
  • திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார்.
  • இத்தல சிவனை தொழுதால் வினைகள் எல்லாம் தொலைந்து இன்பம் தழைத்தோங்கும் .
  • இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவாசியுடன் ஒரே கல்லில் அமைந்த திருவுருவம்.
  • முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பிகையின் சன்னதியில் நான்கு தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன .
  • இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் தருகிறார் . பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது .

தல வரலாறு:

அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான்.

சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியை கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள்.

சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம்.

திறந்திருக்கும் நேரம் மற்றும் வழி

காலை 6 .45 -11 .30
மாலை 5 .30 -8 .30

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்துக்குள் உள்ளே நுழைந்து பின்புறம் அடைந்தால் இக்கோயிலை அடையலாம். சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைய ஆட்டோ உள்ளது .

அருகில் உள்ள கோயில்கள்
1 . நடராஜர் கோயில்
2 . கோவிந்தராஜர் பெருமாள் -திருச்சித்திரகூடம்
3 . தில்லை காளி, சிதம்பரம்
4 . பால்வண்ண நாதர் -சிவபுரி
5 . உச்சிநாதர் கோயில் -சிவபுரி

Location map :

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *