Sri Govindaraja Perumal – Chidambaram.

ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் -திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்)

sri Govindaraja Perumal ,Chidambaram
Moolavar 

மூலவர் : கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர் : தேவாதிதேவன்
தாயார் : புண்டரீகவல்லி
ஆகமம் : வைகானஸம்
தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம்
கோலம் : சயன கோலம்
விமானம் : சாத்வீக விமானம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தில்லைவனம், திருச்சித்திரக்கூடம்
ஊர் : சிதம்பரம்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாஸனம் :குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்
திருவிழா: சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா.

sri Govindaraja Perumal ,Chidambaram
  • திவ்யதேசங்களில் 41 வது திவ்யதேசம் ஆகும்
  • சிவபெருமானின் திருநடனத்தை காண அவதரித்த தலம்
  • சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இடம் , பூலோக கைலாயமாக விளங்கும் தலம்
  • மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார்.
  • பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு. உற்சவர் தேவாதிதேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் த்திரக்கூடத்துள்ளான் சுவாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ரசபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடிமரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

தலபெருமை:

  • மோட்ச தலம்: கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, “தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்,” என்றாள். அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து மோட்சம் கொடுத்தார்.
  • சுவாமி சிறப்பு: மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப்போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்தபோது, அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்றபடியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர்.

பதஞ்சலி சன்னதி: பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒருசமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே, மகாவிஷ்ணு அவரை சிவனின் திருநடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ரபாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திருநடனக்கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்தராஜரை வணங்கி மோட்சம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உதவி செய்வார் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

கைலாயத்தில் ஒருசமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்தபோது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர். அவர் தேவசிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி இருவரும் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் தன் வலக்காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு . பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் தங்கினார்.

அமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்
சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அவரின் சன்னதியின்அருகிலேயே தனி சன்னதியில்  வீற்றியிருக்கிறார் .

காலை 6 .30 – 12 .00
மாலை 5 .00 -10 .30

Location :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *